புறம்போக்கு என்கிற பொதுவுடமை

purampokku
நடிப்பு
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர்

ஒளிப்பதிவு
என்.கே.ஏகாம்பரம்

படத்தொகுப்பு
என்.கணேஷ் குமார்

இசை
வர்ஷன்

பிண்ணனி இசை
ஸ்ரீகாந்த் தேவா

கதை, வசனம், இயக்கம்
எஸ்.பி.ஜனநாதன்

தயாரிப்பு
பைனரி பிக்சர்ஸ்

வெளியீடு
யூடிவி மோஷன் பிக்சர்ஸ்

வெளிவந்த நாள்
15 மே 2015

     ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்த படம். ஆர்யா, மரண தண்டனை கைதி. ஷாம், ஆர்யாவை தூக்கில் போடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேஷ ஜெயில் அதிகாரி. விஜய் சேதுபதி, ஆர்யாவை தூக்கில் போடுகிற தொழிலாளி.

     கம்யூனிச கொள்கையில் தீவிர பற்றுள்ள புரட்சிக்காரர் ஆர்யா. அவருக்கு இந்திய ராணுவத்தினரைக் கொலைசெய்ய முயன்றது உட்பட சிலபல குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அவரைத் தூக்கிலிடும் பொறுப்பு, காவல் துறை அதிகாரியான ஷாம் வசம் ஒப்படைக்கப்படுகிறது அவர் ஆர்யாவை பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்து சென்னையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கிறார். ஆர்யா சார்ந்துள்ள தீவிரவாத குழுவினரும் சென்னைக்கு வந்து, ஆர்யா ஜெயிலில் இருந்து தப்புவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். தீவிரவாத குழுவின் தலைவியாக கார்த்திகா இருக்கிறார். தங்கள் திட்டத்துக்கு உதவும்படி, விஜய் சேதுபதியிடம் தீவிரவாத குழு கேட்க அவரும் உதவ சம்மதிக்கிறார். ஆர்யா ஜெயிலில் இருந்து தப்பினாரா, இல்லையா? என்பதே படத்தின் ‘கிளைமாக்ஸ்.’

     தீவிர கம்யூனிசவாதியாக ஆர்யா. தாடி-மீசையுடன் கூடிய ஒப்பனை இல்லாத முகம். ஜெயில் உடை. மரணத்தின் விளிம்பில் கூட, கம்யூனிச தத்துவங்களை பேசுகிற துணிச்சலான தூக்கு தண்டனை கைதி. கதாபாத்திரத்தை உள்வாங்கி ஒரு போராளியாகவே மாறியிருக்கிறார். வாய் பிளந்து கண்கள் வெறித்திருக்கும் அந்த கடைசி காட்சியில் பார்வையாளர்களை அதிர்ச்சியில் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளார்.

     ‘மெக்காலே’ என்ற ஜெயில் அதிகாரியாக வரும் ஷாம், ஒவ்வொரு அசைவிலும், பார்வையிலும், வசன உச்சரிப்பிலும் போலீஸ் வாசனை. நேர்மையும், கண்டிப்பும் மிகுந்த ஒரு இளம் ஜெயில் அதிகாரியை கண் முன் நிறுத்துகிறார். அவருடைய திடமான உடற்கட்டு அதற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு மனிதாபிமான அதிகாரியாக ஷாம் எங்கேயும் சட்டத்தின் கடமையை தவறுவதில்லை, கண்ணியத்தையும் மீறுவதில்லை.

     தூக்கில் போடுகிற வேலையை செய்யும் விஜய் சேதுபதியின் நடிப்பு விசேஷமான பாராட்டுக்கு உரியது. தண்டனையை நிறைவேற்றிவிட்டுச் சரிந்து உட்காரும் இடத்தில் அபாரமாக நடித்திருக்கிறார்.

     தீவிரவாத கும்பலுக்கு தலைமை ஏற்பவராக கார்த்திகா. போராளியாக பைக்கில் வலம் வரும்போது தமிழ் கதாநாயகிகளுக்குரிய பிம்பத்தை தகர்த்தெறிகிறார்.

     ஒரு முழுமையான ஜெயிலையும், மங்கலான வெளிச்சத்துடன் கூடிய அறைகள், சந்து பொந்துகள் என அனைத்தையும் அரங்காக அமைத்து அசத்தியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் செல்வகுமார். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒரு பக்கம் குலுமணாலியை கண்களுக்கு குளிர்ச்சியாக காட்டுவதோடு, மறுபக்கம் சிறைச்சாலை காட்சிகளில் பிரம்மாண்டமாக மிரட்டியுமிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை திகிலை ஏற்படுத்துகிறது.

     படத்தின் முதல்பாதி மெதுவாக நகர்ந்தாலும் இடைவேளைக்குப்பிறகு எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்படைகிறது.

     மொத்தத்தில் ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ நல்ல முற்போக்கு சிந்தனைகளையும் தரமான கருத்துக்களையும் சொல்லியிருக்கும் புரட்சிகரமான படம்.